1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2017 (14:38 IST)

தமிழகத்தில் நாளை ஆட்டோ, வேன், கார் ஓடாது - அதிரடி அறிவிப்பு

ஜல்லிக்கட்டு தொடர்பான மாணவர்களின் போராட்டத்திற்கு அதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை வாடகை கார், வேன், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவை ஓடாது என தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.


 

 
ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட வேண்டும். மேலும், பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என தமிழகம் எங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், ஐ.டி. ஊழியர்கள் என பலரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அமைதியான வழியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற போராட்டம் தற்போது தமிழகமெங்கும் தீவிரமடைந்துள்ளது. 
 
அவர்களின் போராட்டத்திற்கு வணிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. வருகிற 20ம் தேதி (நாளை) கடையடைப்பு நடைபெறும் என வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. அதேபோல், ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கிடைக்கும் வரை வெளிநாட்டு இறக்குமதியான கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என தேனி மாவட்ட வணிகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், ஜல்லிக்கட்டிற்கு போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் வகையில், தமிழகத்தில் நாளை (ஜனவரி 20ம் தேதி) கார், வேன், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவை ஓடாது என தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.