வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 26 அக்டோபர் 2014 (12:40 IST)

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொண்டு தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
 
என்எல்சியில் பணி புரிந்து வரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிற்சங்க கூட்டமைப்பினர், சுற்றுப்புற கிராம மக்கள், அனைத்துக் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
 
கடந்த 53 நாள்களாக நடந்த போராட்டத்தின் போது 10 சுற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை, 6 சுற்று இருதரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து ஒப்பந்தத் தொழிற்சங்க கூட்டமைப்பினர் தமிழக முதலமைச்சசரை சந்தித்தும் முறையிட்டனர்.
 
இந்நிலையில், சென்னை சாஸ்திரி பவனில், துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் கந்தசாமி, உதவி ஆணையர் சிவராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்த 11 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.110 உயர்த்தி வழங்கவும், பணிக்கொடை, போனஸ் உள்ளிட்டவை வழங்கவும் நிர்வாக தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக கூட்டமைப்பினர் அறிவித்தனர். இதனையடுத்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அன்றிரவு முதல் பணிக்குத் திரும்பினர்.