வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 7 மே 2018 (11:53 IST)

நீட் எனும் அரக்கன் கேட்ட உயிர் பலி...

எங்கே இருக்கிறீர்கள்  பிரதமர் அவர்களே! 

எங்களின் வலிகள், துக்கம், இழப்பு, எல்லாம் விதியின் விளையாட்டு அல்ல. நீங்கள் ஆடும் பரமபத விளையாட்டு என்பதை அறிவோம். இதுவும் கடந்து போகும் என்று கிருஷ்ணச்சாமியின் மரணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் எங்கள் மனம், தயவுச்செய்து CBSE என்று சப்பை கொட்டாதீர்கள்!
 
உங்களை நிராகரித்தோம்! கருப்பு பலூன்களை நீங்கள் போகும் பாதையில் பறக்க விட்டோம்! உங்களை எங்களின் சாலைகளில் பயணிக்க விடவில்லை! உங்களின் கடைசி தமிழக பயணப் பாதை முட்கள்  நிறைந்ததே! உண்மைதான் பிரதமர் அவர்களே! ஆனால் அது எல்லாம் எங்களின் உணர்வுகள் பிரதமர் அவர்களே! 
 
அந்த நிராகரிப்பின் வலிகளை எல்லாம் சேர்த்து நீங்கள் தந்து இருப்பதுதான் கிருஷ்ண சாமியின் மரணம். இன்னும் எத்தனை அனிதாக்கள் உயிர்கள் வேண்டும்! எத்தனை கிருஷ்ண சாமிகள் உயிர்கள் வேண்டும் உங்களின் அதிகார பசிக்கு!
 
அதிகாரம் மகத்தானது மோடி அவர்களே! வந்தவர் எல்லாம் வாழ்ந்ததும் இல்லை மக்கள் மனதில் நின்று விடவும் இல்லை. உங்கள் அதிகாரத்திற்கு அடையாளமாய் கிருஷ்ணச்சாமியின் மரணம். 
 
வார்த்தை தவறி விடும் செக்கு மாடுகள் மக்களைப் பற்றி எப்போது கவலைப்பட்டு இருக்கிறார்கள்! 
 
சிங்கங்கள்  கோலாச்சிய நாட்டில் செக்கு மாடுகள் ஆட்சி செய்தால்,  நீட் எழுத ராஜஸ்தான் அல்ல அமேசான் காடுகள் கூட தமிழனுக்கு  தேர்வு மையங்கள் ஆகும்.
 
தானாய் மெச்சுமாம் தவீட்டு  கொழுக்கட்டை!
 
அதுவாய் மெச்சுமாம் அரிசி கொழுக்கட்டை !
 
அதுபோலத்தான்  இந்த முதல்வரும் துணை முதல்வரும் தரும் நிவாரணங்களும்!
 
பிரதமர் அவர்களே! இது எங்கள் தமிழ் மண்! காலம் எங்களைத் தவம் செய்து பெற்று இருக்கிறது! சிறைக்கூட சிதையும்! சிறைக்கம்பிகள் கூட புரட்சி செய்யும் எங்கள் மண்ணில்!
 
பிரதமர்கள் எல்லாம் பிரதமர்கள் இல்லை! கடைசியாக ஒரு வார்த்தை !
 
பிரதமர் அவர்களே! இறக்கத்தான் பிறந்தோம்,  சற்று இரக்கத்தோடு இருங்கள்!
 
உண்மையை விட எதுவும் ஒன்றும் இல்லை! உண்மையாக இருங்கள்! 

இரா காஜா பந்தா நவாஸ்