வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 18 நவம்பர் 2017 (16:01 IST)

மருத்துவமனையில் பதுங்கிய நடராஜன் - கைது பயம் காரணமா?

சசிகலாவின் கணவர் நடராஜன், சிறைக்கு செல்வதிலிருந்து தப்பிப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
1994ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து லெக்சஸ் காரை இறக்குமதி செய்த போது ரூ.1.62 கோடி மோசடி செய்த வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன், தமிழரசு பப்ளிகேஷன் நிர்வாகி வி.என்.பாஸ்கரன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் மீது சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
 
இந்த வழக்கில் இவர்கள் அனைவருக்கும், தலா 2 வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த வழக்கை எதிர்த்து நடராஜன் உட்ப 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. 
 
இதனால், நடராஜன் சிறைக்கு செல்லும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற வேண்டுமானாலும், அவர் தற்போது சிறைக்கு சென்று, அங்கிருந்துதான் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், உடல் நிலையை காரணம் காட்டியும் நடராஜன் தப்பிக்க முடியாது என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். சமீபத்தில்தான் சென்னை குளோபல் மருத்துவமனையில் அவருக்கு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
 
இந்நிலையில், நேற்று உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்ற நடராஜன், அங்கேயே தங்கிவிட்டார். எப்படியாவது சிறைக்கு செல்வதிலிருந்து தப்பிப்பதற்காகவே இந்த திட்டத்தை அவர் செயல்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அவர் தானாக முன் வந்து நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால், தேடப்படும் குற்றவாளியாக அவரை நீதிமன்றம் அறிவிக்கும். அதன் பின், வலுக்கட்டாயமாக போலீசார் அவரை கைது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.