வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2017 (12:11 IST)

கமல்ஹாசன் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறாரா தினகரன்?

அரசுக்கு எதிராக பல பரபரப்பான கருத்துகளை தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசனை, அதிமுகவின் அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையான ’நமது எம்.ஜி.ஆர்’ கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது.


 

 
தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நமது எம்.ஜி.ஆர் இதழில் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  2ஜி விவகாரத்தில் பல லட்சம் கோடி ஊழல் செய்த திமுகவிற்கு ஆதரவாக கமல்ஹாசன் செயல்படுகிறார் எனவும், அவர் கருப்பை சட்டை அணிந்து கொண்டு பெரியாரிஸ்ட் போல் அவர் வேஷம் போட்டு வருவதாகவும் அதில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், அவர் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்,  சேரி பிஹேவியர் என காயத்ரி ரகுராம் பேசியதற்கு, அதில் தவறில்லை என்கிற ரீதியில் கமல் கருத்து தெரிவித்து தனது சாதியத்தை அவர் வெளிப்படுத்தினார் எனவும் , முல்லைப் பெரியாறு, காவிரி நீர் பிரச்சனை, மீத்தேன் திட்டம் ஆகிய பிரச்சனைகளில் அவர் கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்ததின் காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 
 
நமது எம்.ஜி.ஆர் இதழ் தற்போது தினகரனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், கமல்ஹாசன் கூறிய கருத்திற்கு அமைச்சர்கள் கண்ணியமாக பேசியிருக்கலாம் என அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் அவரது கட்டுப்பாட்டில் உள்ள நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கையில் கமல்ஹாசனுக்கு எதிராக செய்திகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.