1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (16:49 IST)

முகாந்திரம் இல்லை ; நக்கீரன் கோபால் விடுதலை : நீதிமன்றம் அதிரடி

நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி மறுத்ததோடு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

 
சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி கட்டுரை எழுதியதால், அவர் மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
இதைத் தொடர்ந்து, இந்து பத்திரிக்கையாளர் ராம் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக நடந்த விவாதத்தில் “நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் ஆளுநர் தெரிவிக்கவில்லை. ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரை தொடர்பாக தற்போது கைது செய்தது முறையல்ல” என நக்கீரன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், மூத்த பத்திரிக்கையாளர் இந்து ராமும், இது தவறான முன்னூதாரணம், இது தொடர்ந்தால் நாடெங்கும் பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு தொடர்வார்கள் என தெரிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி கோபிநாத் “ 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபாலை கைது செய்யப்பட்டதில் முகாந்திரம் இல்லை. அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முடியாது” எனக்கூறி நக்கீரன் கோபாலை அவர் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கோபால் “நீதிமன்றம் கருத்து சுதந்திரம் பக்கம் நின்றதால் நான் விடுதலை அடைந்தேன்” என தெரிவித்தார்.