1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2016 (12:08 IST)

அப்பல்லோவில் மர்ம நபர் : போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு

அப்பல்லோவில் மர்ம நபர் : போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்பல்லோ வாசலில், நேற்று ஒரு மர்ம நபர் நுழைந்த விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

 
உடல் நலக்குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல், சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலை பற்றி தெரிந்து கொள்ள பல அரசியல் தலைவர்கள் தினமும் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
 
எனவே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவர்கள் முதல், சிகிச்சை எடுக்க வருபவர்கள் மற்றும் அவர்களை பார்க்க வருபவர்கள் அனைவரிடம் சிகிச்சைக்குறிய சரியான ஆவணங்களை சோதனை செய்த பின்புதான் அனுமதி அளிக்கப்படுகிறது. அதிலும், முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கும் 2வது தளத்தில் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.
 
இப்படி பலத்த பாதுகாப்பில் இருக்கும் அப்பல்லோவில், நுழைவு வாயிலில் இருந்த போலீசாரின் பாதுகாப்பையும் மீறி,  நேற்று தாடியுடன் ஒரு மர்ம நபர் உள்ளே நுழைந்தார். அவரின் நடவடிக்கை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது தன்னுடைய பெயர் உமேஸ்ரெட்டி(37) என்று அவர் தெரிவித்தார். மேலும், சிகிச்சை பெறவே தான் இங்கு வந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், அவரின் கையில் அதிமுக துண்டு இருந்தது.
 
மேலும் அவர் குடிபோதையில் இருந்தார். எனவே போலிசார்,  அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததனர். அப்போது தன்னுடைய சொந்த ஊர் ஒசூர் என்றும், சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதன்பின், அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். 
 
இந்த சம்பவம் நேற்று அப்பல்லோ வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.