1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 மே 2019 (19:31 IST)

என் டுவிட்டரை ஹேக் செஞ்சிட்டாங்க: கோட்சேவை நல்லவர் என கூறிய அமைச்சரின் அந்தர் பல்டி!

மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே நல்லவர் என டுவீட் செய்த மத்திய அமைச்சர் ஒருவர் அந்த டுவீட்டை திடீரென டெலிட் செய்து, என் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார்.
 
கர்நாடக மாநில பாஜக தலைவர்களில் ஒருவர் அனந்தகுமார் ஹெக்டே. மத்திய திறன் வளர்ப்பு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சராக இருந்து வரும் இவர் அவ்வப்போது சர்ச்சை பேச்சுக்கள் பேசி நம்மூர் எச்.ராஜா போன்று நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
 
இந்த நிலையில் சமீபத்தில் அனந்தகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் , 7 தசாப்தங்கள் கழித்து, மாறிவிட்ட சூழ்நிலைக்கு நடுவே, இப்போதைய தலைமையினர் விவாதம் நடத்துவதை அறிந்து, நாதுராம் கோட்சே மகிழ்ச்சியடைந்திருப்பார் என்றும், நாதுராம் கோட்சை தரப்பு நியாயங்களை இந்த தலைமுறை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த டுவீட் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது அதுமட்டுமின்றி கோட்சேவை தேசபக்தர் என்று கூறிய பிரக்யாசிங் மன்னிப்பு கேட்கும் நிலை வந்ததை அறிந்ததும் அனந்தகுமாரின் இந்த டுவீட் திடீரென மாயமாய் மறைந்துவிட்டது
 
இதுகுறித்து கூறிய அமைச்சர் அனந்தகுமார், 'நேற்று முதல், எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. காந்தியின் கொலையை நியாயப்படுத்த முடியாது. காந்தி இந்த நாட்டுக்கு அளித்த பங்களிப்புக்கு அனைவரது மரியாதையும் உண்டு' என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் இந்த டுவீட்டை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்