வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 29 ஜூலை 2014 (16:52 IST)

திருமணத்திற்கு வற்புறுத்திய மகனை கடத்தி கொலை செய்து நாடகமாடிய தந்தை

மணப்பாறை அருகே திருமணம் செய்ய வற்புறுத்திய மகனை கடத்தி கொலை செய்து விட்டு காணவில்லை என்று நாடகமாடிய தந்தை உள்பட 3 பேர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொம்மம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். விவசாயி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு சேதுராமன் (வயது 25) என்ற மகனும், இரண்டாவது மனைவிக்கு குணசேகரன் என்ற மகனும் உள்ளனர்.
 
இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி வீட்டில் இருந்த சேதுராமன் திடீரென மாயமாகி விட்டதாகவும், அவன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் பெருமாள் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அப்போதைய துணை ஆய்வாளர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து சேதுராமனை தேடி வந்தார்.
 
இருப்பினும் 7 மாதங்கள் ஆன நிலையில் சேதுராமன் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் உயிருடன் உள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்திட திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி மணப்பாறை காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஆய்வாளர் கருணாகரன் சேதுராமனை தேடும் பணியில் ஈடுபட்டார்.
 
இந்நிலையில் நேற்று காலை வேங்கைகுறிச்சி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணியிடம் பெருமாள் அவரது மகன் குணசேகரன், அதே ஊரைச் சேர்ந்த முருகராஜ் ஆகியோர் சரண் அடைந்தனர். தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சேதுராமன் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தார். இதனால் அவரை கொலை செய்து விட்டால் பிரச்சனைக்கு தீர்வு வந்து விடும் என்பதால் பெருமாள், மகன் குணசேகரன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த முருகராஜ் ஆகியோர் சேர்ந்து சேதுராமனை தஞ்சாவூர் அருகே உள்ள பூதலூருக்கு அழைத்துச் சென்றோம்.

அங்கு சேதுராமன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து அருகில் உள்ள வெண்ணாற்றில் உடலை போட்டு விட்டு வந்து காணாமல் போனதாக நாடகமாடியதாக கிராம நிர்வாக அலுவலரிடம் பெருமாள் வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து 3 பேர் மீதும் மணப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.