1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (13:06 IST)

ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக எம்.எஸ்.தோனி தொடர்ந்த வழக்கு! – சிறை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்!

பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மீது தொடர்ந்த வழக்கில் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி கடந்த 2008 முதலாக ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல்லில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதில் எம்.எஸ்.தோனிக்கும் மோசடியில் தொடர்பு உள்ளதாக பேசிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா நிறுவனம் உள்ளிட்டோர் மீது எம்.எஸ்.தோனி தரப்பில் தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக வழக்குத் தொடரப்பட்டது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் எம்.எஸ்.தோனியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு சம்பத்குமார் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சம்பத்குமார் மீதான கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள், தோனி ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K