1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 2 மே 2020 (12:47 IST)

ஊரடங்கே ஒட்டுமொத்த தீர்வல்ல! – மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3 வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு இன்னமும் குறையாத சூழல் நீடிக்கும் நிலையில் ஊரடங்கு மூன்றாம் கட்டமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் இருக்க வேண்டியது மக்களின் கடமை. மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. ஊரடங்கு என்பது கொரோனா பரவலை தடுக்க ஒரு தொடக்கம்தான். அதனால் ஊரடங்கே தீர்வாகாது. ஊரடங்கை நீடித்துக்கொண்டே போவதோடு அரசின் பணி முடிந்து விடுவதில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.