1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 4 ஜனவரி 2017 (13:10 IST)

கண்ணீர் மயமாக திகழ்ந்த திமுக பொதுக்குழு! - தொண்டர்கள் உணர்ச்சிப் பெருக்கு

திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் க.அன்பழகன், துரைமுருகன் ஆகியோர் கண்ணீர் சிந்தியதைக் கண்டும் தொண்டர்களும் கண்ணீர் விட பொதுக்குழுவே கண்ணீர் மயமானது.


 

திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (04.01.2017) காலை பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இந்த கூட்டத்தில் திமுக செயல்தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், செயல் தலைவருக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் அன்பழகன் முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிந்தார். திமுகவின் சட்டவிதி 18ல் திருத்தம் செய்யப்பட்டு, அவர் செயல் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை திமுக பொது செயலாளரான க.அன்பழகன் அறிவித்தார். அப்போது அறிவிப்பை வாசிக்கும்போதே கண் கலங்கினார் அன்பழகன்.

அதே சமயம் அன்பழகன் அறிவித்ததும் அண்ணா அறிவாலயமே அதிரும் அளவிற்கு திமுக நிர்வாகிகள் எழுந்துநின்று கைத்தட்டி வரவேற்றனர். இதனால், செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினும் சிறுது கண் கலங்கினார்.

பிறகு, திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை தலைமைப் பொறுப்பேற்குமாறு துரைமுருகன் கண்ணீர் மல்க அழைப்பு விடுத்தார்.

மேடையில் உரையாற்றிய துரைமுருகன், "தம்பி திமுகவின் செயல் தலைவராக தலைமை தாங்க வா. உண் தலைமைக்கு ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்" என கூறிய அவரது கண்களில் இருந்து கண்ணீர் உதிர்ந்தது.

அப்போது மேடையில் இருந்த ஸ்டாலின் தனது உணர்ச்சியை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார். துரைமுருகன் கண்ணீரோடு அழைப்பு விடுத்ததையும், ஸ்டாலின் சோகத்தை அடக்கிக் கொண்டு உட்கார்ந்து இருந்ததையும் கண்ட கழக நிர்வாகிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.