வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2016 (14:25 IST)

மு.க.அழகிரி செய்து வரும் துரோகத்திற்கு என் பெயரை பயன்படுத்துவதா: கருணாநிதி கண்டனம்

திமுக - காங்கிரஸ் கூட்டணி பற்றி கருத்து கூறிய மு.க.அழகிரிக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.


 

 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
 
திமுக கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக, கட்சியினால் ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் மு.க.அழகிரி, அவ்வப்போது கட்சியின் வளர்ச்சியை கெடுக்கும் வகையிலும், கட்சியின் எழுச்சியை குலைப்பதற்காகவும் வேண்டும் என்றே திட்டமிட்டு அறிக்கை வெளியிட்டும், பேட்டி கொடுத்தும் வருகிறார்.
 
அவருக்கும் திமுகவுக்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது. இந்த நிலையில், திமுக - காங்கிரஸ் இடையே இந்த தேர்தல் கூட்டணி ஏற்பட்டது குறித்து, இரண்டு கட்சிகளுக்கும் கொள்கையே இல்லை என்றும், அதிமுக வை எந்த கூட்டணியும் வெல்ல முடியாது என்றும் பேட்டி அளித்திருப்பதும் எவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
 
மேலும், அவர் செய்து வரும் துரோகத்திற்கு என் பெயரை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. திமுக தொண்டர்கள் யாரும் அவர் தெரிவித்து வரும் கருத்துகளை பொருட்படுத்த தேவையில்லை. அவரையும், அவருடைய பேச்சுகளையும் அலட்சியப்படுத்த வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 
 முன்னதாக மு.க.அழகிரி, திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்தார்.
 
அப்போது, திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து விமர்சித்ததுடன், அதிமுகவை யாராலும் வெல்லமுடியாது என்றும கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.