வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜூன் 2018 (10:36 IST)

ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் - மேடையில் உளறிக்கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் பங்கு போட்டுக்கொண்டனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
ஏற்கனவே ஒரு அதிமுக விழாவில் ‘அப்போலோவில் நான் உட்பட எந்த அமைச்சரும் ஜெ.வை பார்க்கவில்லை’ எனக்கூறி தீயை கொழுத்திப்போட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது மீண்டும் உளறிக்கொட்டியுள்ளார்.
 
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் “ஜெ.வின் மறைவிற்கு பின் கட்சியை கைப்பற்ற தினகரன் முயன்றார். அதனால், பதவி ஆசை காட்டி 18 எம்.எல்.ஏக்களையும் தன் பக்கம் அவர் இழுத்துக்கொண்டார். ஆனால், அவரால் ஆட்சியை அமைக்க முடியவில்லை. எனவே, ஸ்டாலினை முதல்வராக நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. 
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன் வியர்வை, ரத்தம், பணம் ஆகியவற்றை கொடுத்து எங்கள் அனைவரையும் எம்.எல்.ஏ ஆக்கினார். ஆனால், ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏக்களும் பெற்றுக்கொண்டு தற்போது மக்களை ஏமாற்றி வருகின்றனர்” என அவர் பேசினார்.
 
அதிமுக மேடையில் ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் என அமைச்சர் சீனிவாசன் பேசியது மேடையில் இருந்தவர்கள் மத்தியிலும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.