1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 5 மார்ச் 2015 (14:47 IST)

அக்ரி கிருஷ்ணமூர்த்தி கட்சி பதவியிலிருந்து நீக்கம்; அமைச்சர் பதவியும் பறிக்கப்படுகிறது?

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி  கட்சி பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
 
அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். தற்போது அந்தப் பொறுப்பு உட்பட கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து  நீக்கப்பட்டுள்ளார்.
 
வேளாண்மைத்துறையில்,  4 ஓட்டுநர்கள் நியனமத்திற்கு ரூபாய் 12 லட்சம் லஞ்சம் கேட்டு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொல்லை கொடுத்ததால், நெல்லை மாவட்ட வேளாண்துறை செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது புகார் கூறப்பட்டது.
 
இதனையடுத்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருந்தன.
 
கடந்த மாதம் நெல்லை மாவட்ட வேளாண்துறை செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கு  அமைச்சர் கொடுத்த நெருக்கடியே காரணம் என்று வலுவான குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய அதிமுக தலைமை அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.
 
அவருக்கு பதிலாக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன்,  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை கூடுதலாகக்  கவனிப்பார் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
இதனிடையே அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்று பிற்பகலில் இதற்கான உத்தரவு வெளியாகும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.