வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2016 (19:38 IST)

மக்கள் நல கூட்டணி விரைவில் காணாமல் போய்விடும்: ஈ.ஆர்.ஈஸ்வரன் பேச்சு

யார் முதல்வர்? என்பதில் ஏற்படும் போட்டியிலேயே இந்த மக்கள் நல கூட்டணி விரைவில் காணாமல் போய்விடும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.


 

 
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் கொமதேக மத்திய மண்டல மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
 
அப்போது ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியதாவது:–
 
இங்கு திரண்டு இருக்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும் போதே வரும் சட்டமன்ற தேர்தலில் நமக்குத்தான் வெற்றி என்பது நிரூபனமாகிறது.
 
ஒவ்வொருவரின் முகத்திலும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற லட்சிய குறிக்கோள் தெரிகிறது. இந்த கூட்டத்தைப் பார்க்கும்போது இனியாவது கொங்கு 3 ஆக.... 4 ஆக.. இருக்கிறது என்று யாராலும் கூற முடியுமா?
 
தேர்தலையொட்டி இப்போது மக்கள் நல கூட்டணி ஒன்று புதிதாக முளைத்துள்ளது. தேர்தல் வரும் வரையாவது இவர்கள் ஒற்றுமையாக இருப்பார்களா? யார் முதல்வர்? என்பதில் ஏற்படும் போட்டியிலேயே இந்த மக்கள் நல கூட்டணி விரைவில் காணாமல் போய்விடும்.
 
விவசாய நிலங்களில் கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு பதிக்கப்பட போவதாக இங்கே பேசினார்கள். நான் இந்த மாநாடு மூலமாக ஒன்றை திட்டமிட்டு கூறிக்கொள்கிறேன்.
 
ஈரோடு மாவட்டத்தில் எந்த ஒரு விவசாய நிலங்களின் வழியாகவும் எரிவாயு குழாயை பதிக்க விடமாட்டோம்.
 
கொமதேக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறது? என்பதை அறிய அனைத்து கட்சியினரும் ஆர்வமாக உள்ளனர்.
 
இப்போது எங்களுடன் அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேசி கொண்டு இருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரை எங்கள் கட்சியின் மக்கள் நலன் காக்கும் கோரிக்கைகளை யார் ஏற்று கொள்கிறார்களோ, அவர்களுக்குத்தான் ஆதரவளிப்போம். அவர்களுடன்தான் கூட்டணி அமைப்போம்.
 
ஒன்று மட்டும் நிச்சயம். எங்களுடன் எந்த கட்சி கூட்டணி அமைக்கிறதோ, அந்த கட்சிதான் தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் ஆட்சி அமைப்பார்கள். இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் பேனார்.