1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 26 மே 2015 (16:35 IST)

திமுக தொண்டர்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது: கருணாநிதி பெருமிதம்

திமுக தொண்டர்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதாக கூறிய அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களை அறிவுறுத்தினார்.
 

 
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில் கருணாநிதி பேசியதாவது:-
 
மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் கலந்துகொள்ளவில்லை. அவருடைய உடல்நிலை சரியானதும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் நிச்சயம் பங்கேற்பார்.
 
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ற வகையில், என்னுடைய அறிவிப்பை மு.க.ஸ்டாலின் படித்துக் காட்டினார். அதை வெறும் அறிவிப்பாக எடுத்துக்கொள்ளாமல், ஊராருக்கும் கட்சியின் எல்லா மட்டங்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்.
 
மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மதுரை பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த மக்கள் திரளை தொலைக்காட்சியில் பார்த்தேன். அந்தக் கூட்டத்தின் பொலிவு, அதனால் கட்சித் தோழர்களிடையே ஏற்படும் எழுச்சி எத்தகையது என்பதை என்னால் நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உணர முடிந்தது.
 
அந்தப் பொலிவும் வலிவும் திமுகவுக்கு என்றும் உண்டு என்ற சூழலை நீங்கள் எல்லாம் உருவாக்க வேண்டும். எனது பெயரால் இங்கு வெளியிடப்பட்ட அறிவிப்பை (ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது) எல்லா தரப்பினருக்கும் பரப்ப வேண்டும்.
 
எதிர்காலத்தில் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை எல்லாம் துடைத்து, திராவிட இயக்கத்தின் தீரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். தமிழகத்துக்கு நேர்ந்துள்ள சாபக்கேடு நீங்க அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
 
இவ்வாறு கருணாநிதி பேசினார்.