1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2016 (15:42 IST)

தலைமறைவு ஆனதில் இருந்து சொகுசு கார்களிலேயே சுற்றியுள்ள மதன்

சென்னையில், எஸ்ஆர்எம் கல்லூரி நிர்வாகத்திற்கும், வேந்தர் மூவிஸ் மதன் இடையே மருத்துவப்படிப்பு தொடர்பாக பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனையில் கருத்து வேறுபாடு எழுந்தது.


 

இதனையடுத்து, கடந்த மே மாதம் 27 ஆம் தேதி, கங்கையில் சமாதி ஆகப்போவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வேந்தர் மூவிஸ் மதன் மாயமானார். இதனால் அவரை கண்டுபிடித்துதரக் கோரி அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் காவல்துறையிடம் ஏற்கனவே புகார் அளித்தனர்.

மேலும், வேந்தர் மூவிஸ் மதன் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை கண்டிபிடிக்க உத்தரவிட்டது. இது குறித்த வழக்கை விசாரிக்க காவல்துறை கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மதனை காவல்துறை கைது செய்து ஆஜர்படுத்தவில்லை என்றால், மாநகர ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என தெரிவித்தனர்.

இதற்கிடையில், மதனின் முக்கிய கூட்டாளி என்று கருதப்படும் விஜய் பாண்டியன் மற்றும் மதனின் நண்பர் பார்க்கவன் பச்சமுத்து ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், மதனை திருப்பூர், பூண்டியில் உள்ள வீடு ஒன்றிலை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். மதனிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 6 மாதங்களாக போலியான நம்பர் கொண்ட 2 சொகுசு கார்களில் 8 மாநிலங்களில் வலம் வந்ததாகவும், காருக்குள்ளேயே பெரும்பாலும் இருந்து வந்ததாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது.