வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2017 (06:55 IST)

ஓபிஎஸ் போடுவது உத்தமர் வேடம்: விரைவில் அவரும் சிக்குவார்! மு.க.ஸ்டாலின்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் நேற்றிரவு திமுக சார்பில் புதிய வண்ணாரப்பேட்டையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்[புரையாற்றினார். இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:


 


''தமிழ்நாட்டுக்கு இனி எப்போது எந்த தேர்தல் வந்தாலும் நாம்தான், நம்முடைய அணிதான் வெற்றுபெறும். இன்னும் சொல்லப்போனால், அண்ணன் துரைமுருகன் சொன்னது போல தமிழ்நாட்டுக்கே பொதுதேர்தல் வந்தாலும் தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். ஜெயலலிதா ஆட்சியில் அரசு நிர்வாகம் சீர்குலைந்து கிடந்தது. இப்போது, இன்னும் சீரழிந்து ஊழல் ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கிறது.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், சமீபத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனையில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 5.16  கோடி ரூபாய் ஊழல் செய்தாதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 31 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்களின் இத்தகைய 5 ஆண்டு ஊழலை கணக்கிட்டால் 3,600 கோடி ரூபாய் அளவுக்கு வரும். இதெல்லாம் சின்னச் சின்ன ஊழல்கள். எல்லாவற்றையும் கணக்கிட்டால் எத்தனை லட்சம் கோடி ஊழல் செய்தார்களோ? எனவேதான் இதையெல்லாம் கண்டறிய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என்று கேட்கிறோம்.

சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் என்றால் பொதுவாக 6 பறக்கும் படை அமைப்பார்கள். ஆனால், ஆர்.கே.நகர் தேர்தல் பணிக்கு என்று மட்டும் 61 பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. அதில், 279 காவலர்கள் இருந்தார்கள். 70 தேர்தல் பார்வையாளர்கள், 256 நுண் பார்வையாளர்கள், 6 வெளிமாநில தேர்தல் பார்வையாளர்கள், 10 கம்பெணி மத்திய போலீஸ் படை என்று அடுக்கடுக்காக ஆள்களை போட்டு தேர்தல் வேலைகளை தேர்தல் ஆணையம் பார்த்தாலும் டி.டி.வி.தினகரன் அணி கனக்கச்சிதமாக செயல்பட்டு தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றி பணப்பட்டுவாடாவை முடித்து விட்டார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரு மாநில முதலமைச்சரையே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க களத்தில் இறக்கி விட்டது இங்கே மட்டும்தான் நடந்தது. அமைச்சர்களும் எம்.பி-க்களும் பணம் கொடுக்கு வேலையை செய்திருக்கிறார்கள்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எழுதி வைத்துள்ள லஞ்சக்கணக்கில் இடைத்தேர்தலில்  வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க ஜெயலலிதா போட்ட கையெழுத்து சரியானதுதான் என்று சாட்சி சொன்ன அரசு மருத்துவர் பாலாஜி இப்போது சிக்கி இருக்கிறார். அவர் 5 லட்சம் ரூபாய் வாங்கியதை ஒப்புக் கொண்டிருந்தார். அனைத்து அமைச்சர்களும் வருமான வரிதுறை வெளியிட்ட ஆவணத்தை போலி என்று மறுத்து சொன்னது போல இப்போது இந்த டாக்டர் பாலாஜியும் தான் பணம் வாங்கவே இல்லை என்று சொல்கிறார். ஆனால் அவரின் ஒப்புதல் பேச்சு வாட்ஸ் அப்-களில் சாட்சியாக வலம் வந்து கொண்டு இருக்கிறது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் நவம்பர் மாத ஊழல் பட்டியல் வெளியாகி இப்போது அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வர். ஆனால், இப்போது அவர் உத்தமன் வேடம் போட்டுக் கொண்டு இருக்கிறார். ஜெயலலிதா, சசிகலா, மணல் சேகர் ரெட்டி, விஜயபாஸ்கர் எல்லாம் இப்போது சிக்கி விட்டார்கள். அதில் ஓ.பன்னீர்செல்வம் மட்டும்தான் தப்பிக் கொண்டு இருக்கிறார். எத்தனை நாள்தான் அவர் தப்பிக்க முடியும்? அவரின் ஊழல்களும், கையாடல்களும் வெளிச்சத்துக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை. முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைத்து அமைசர்களையும் இனியும் விட்டு வைக்க கூடாது. அது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தேச நலனுக்கே எதிரானது. இந்த கேடுகெட்ட ஆட்சியாளர்களிம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நிதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்"