செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (14:49 IST)

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: வானிலை ஆய்வு மையம்..!

கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியது என்பதும், அதன்பின் காற்றழுத்தான மண்டலமாக மாறி ஒரிசா அருகே கரை கடந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வங்க கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேற்கு வங்கத்தை ஒட்டிய வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் நிலவுகிறது என்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்குவங்க மற்றும் ஜார்கண்ட் நோக்கி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இந்த காற்றழுத்த தாழ்வு நகர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran