1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2015 (12:51 IST)

திருமணமான சில மாதங்களில் பெற்றோரால் பிரிக்கப்பட்ட காதல் மனைவி: மீட்டுத் தரக்கோரி கணவர் மனு

திருப்பூரில் காதல் திருமணம் செய்த தனது மனைவியை, பிரித்துக் கூட்டிச் சென்ற, பெற்றோரிடம் இருந்து தனது மனைவியை மீட்டுத்தரக் கோரி கணவர் புகார் மனு கொடுத்துள்ளார்.
 
திருப்பூர் மாவட்டம் வளையங்காடு வி.பி.சி.சித்தன் நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி ஜோதி. 45 வயதுடைய இவர் பனியன் நிறுவன உரிமையாளர். இவர் தனது மகன் ராஜாவுடன் திருப்பூர் மாநகர கால்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
 
எனது மகன் ராஜாவும், திருப்பூர் மாஸ்கோ நகர், கிருஷ்ணாநகர் 1 ஆவது வீதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
 
இருவரும் எங்கள் வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி எங்களுடைய வீட்டிற்கு வந்த எனது மருமகளின் பெற்றோர் அவரை கோவிலுக்கு செல்வதாக கூறி அழைத்துச் சென்றனர். பின்னர் மருமகள் எங்கள் வீட்டிற்கு வரவில்லை.
 
இது குறித்து அவருடைய பெற்றோரிடம் கேட்டபோது பதில் கூற மறுக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எனது மகன் ராஜாவை எனது மருமகள் செல்போனில் தொடர்பு கொண்டு பெற்றோர் தன்னை ஒரு பனியன் நிறுவனத்தில் கட்டாயப்படுத்தி வேலைக்கு அமர்த்தியிருப்பதாகவும், உடனடியாக தன்னை மீட்கும்படியும் கூறியுள்ளார்.
 
இதனால் எனது மருமகளை அவருடைய பெற்றோரிடம் இருந்து மீட்டு எனது மகன் ராஜாவுடன் சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், இது குறித்து வேலாம்பாளையம் காவல்துறை ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் உடுமலையில் உள்ள அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.