1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (17:04 IST)

செல்லாது..செல்லாது...இதை ஏற்க மாட்டோம் - கே.பி. முனுசாமி திட்டவட்டம்

மறைந்த முதல்வர் ஜெ.வின் மரணம் குறித்து சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியாகும் எனவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்க உள்ள விசாரணைக்குழுவை ஏற்க முடியாது என ஒ.பி.எஸ் அணி ஆதரவு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டுமெனில், முதலில், சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் மற்றும் ஜெ.வின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். அந்நிலையில், முதல் கோரிக்கையை ஏற்கனவே எடப்பாடி அணி நிறைவேற்றியுள்ளது.  
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் “முதல்வர் ஜெ.வின் இறப்பு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும். ஜெ. வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலைய இல்லம் நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்” என அறிவித்தார். 
 
இதன் மூலம், ஓ.பி.எஸ் அணியின் அனைத்து கோரிக்கைகளையும் எடப்பாடி அணி நிறைவேற்றி விட்டது. எனவே, இரு அணிகளும் விரைவில் இணைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளரிடம் கருத்து தெரிவித்துள்ள கே.பி.முனுசாமி “ தேர்தல் கமிஷனில் எடப்பாடி அணி சமர்பித்துள்ள பிரமாண பத்திரத்தை வாபஸ் பெற்றால் மட்டுமே கட்சியிலிருந்து சசிகலாவை நீக்கியதாக கருதப்படும். அதை இதுவரை அவர்கள் செய்யவில்லை. மேலும், ஜெ.வின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஓய்வு பெற்ற நீதிபதி விசாரித்தால் உண்மை வெளியே வரும் என்பது சந்தேகமே. எனவே இது இரண்டும் நடக்கும் வரை அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பே இல்லை” என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 
 
அதே சமயம், ஜெ. வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.