வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 15 பிப்ரவரி 2017 (18:58 IST)

சசிகலாவிற்கு அடி மேல் அடி - ஆள் கடத்தல் வழக்கு பாய்ந்தது

அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூருக்கு கடத்தி சென்று, வலுக்கட்டாயமாக அவர்களை அடைத்து வைத்ததாக, போலீசார் சசிகலா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியதை அடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் அமைந்துள்ள கோல்டன் பே ஹபுஸ் ரிசார்ட்டில் கடந்த 8ம் தேதி தங்க வைக்கப்பட்டனர். இதுவரை அவர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
 
இந்நிலையில், மதுரை தெற்கு பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ சரவணன், கூவத்தூரிலிருந்து மாறுவேடத்தில் தப்பி, ஓ.பி.எஸ் பக்கம் தஞ்சமடைந்தார். 
 
மேலும், சசிகலா தரப்பு தன்னை கடத்தி சென்றதாக அவர் டிஜிபியிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் உள்ளிட்ட 5 பேர் மீது கூவத்தூர் பகுதி போலீசார் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
தற்போது அதிமுக  சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதமும் ஆளுநரிடம் நேற்று கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை அடுத்து, சிறையில் சரண் அடைவதற்காக, சசிகலா ஏற்கனவே பெங்களூருக்கு சென்று விட்டார்.
 
இந்நிலையில், சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது ஆள் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..