வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 30 நவம்பர் 2016 (18:36 IST)

கடினமான பணிகளையும் எளிதாக கையாளும் கரூர் விஜயலட்சுமி

கரூரிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுக்காலியூர் பகுதில் பஞ்சர் கடை வைத்திருப்பவர் விஜயலட்சுமி. 


 

 
பஞ்சர் கடை என்றால் சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடை அல்ல. டாராஸ், டிரையலர் லாரி, முதல் டிரெக்டர் வரை மிகபெரிய கனரக வாகனங்களில் டயர்களை கழட்டி பஞ்சர் ஓட்டும் பணி.. அதுவும் 24 மணி நேரமும் பஞ்சர் ஒட்டி தரும் பணி.
 
53 வயதாகும் விஜயலட்சுமி 25 ஆண்டுகளாக பஞ்சர் ஒட்டி வருகிறார். இது மட்டுமில்லாமல், டிராக்டர் மூலம் உழவு பணியும் செய்து வருகிறார். குடும்பத்தலைவியாக வீட்டு வேலை, தோட்டத்து வேலை என அனைத்து பணிகளையும் செய்யும் இவரை பார்த்தால் பிரமிப்பாகத்தான் உள்ளது.


 

 
கார் ஓட்டும் பெண்கள் மத்தியில் டிராக்டர் ஓட்டி உழவு பணியும் மேற்கொள்கிறார் விஜயலட்சுமி. காலையில் வீட்டு வேலைகளை முடித்து தனது தாய்க்கும் கனவருக்கும் உணவு செய்துகொடுத்து விட்டு  தோட்டத்திற்கு சென்று கால்நடைகளை தீவணம் அறுத்து கொண்டுவருகிறார்.. இந்த பணிகளை முடிக்கும் போது  பஞ்சர்கடை பணி வந்து விடுகிறது. கனரக வாகனங்களின் டயர்களை எளிதாக கழட்டி பஞ்சர் ஒட்டுகிறார்,
 
இது எப்படி சாத்தியம் என்று அவரிடம் கேள்வி கேட்ட போது .தான் கடந்து வந்த பாதையை சொல்கிறார்.


 

 
கரூர் அருகே தரகம்பட்டி கிராமத்திலிருந்து 25 ஆண்டுகளுக்கு திருமணமாகி கரூர் வந்ததாக கூறும் விஜயலட்சுமி  ஒரு பெண் குழந்தை இரண்டு ஆண் குழந்தைகளுடன் தனது கணவருடன் மகிழ்வாக நடத்தி வந்துள்ளார். தனது கணவர்  அரசு பேருந்தில் ஓட்டுநராக பணி புரிந்து வந்த நிலையில், பேருந்து விபத்து ஏற்பட  தனது கணவர் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டார் 
 
குழந்தைகளுடன் செய்வதாறியாமல் தவித்த விஜலட்சுமியிடம்  குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என்று அவரது கணவர் கூறியுள்ளார். தனது கணவருக்கு தைரியம் சொன்ன விஜயலட்சுமி  தனது கணவரின் தம்பிகள் வைத்திருந்த பஞ்சர் கடையில் பணி செய்ய தொடங்கினர். 
 
தனது கணவர்  மீண்டு வரும் சூழலில் அடுத்த அடி விஜயலட்சுமிக்கு இடியாக வந்து விழுந்தது. பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த  தனது மகள் அருகில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து இறந்த செய்தி  கலங்கி தான் போனார். 
 
குடும்பத்தை ஓட்டுவதற்கே சிரமம் ஏற்பட்ட சூழலில் தனியாக பஞ்சர் கடை வைக்க பணத்திற்கு என்ன செய்யவது என்ற யோசித்த நிலையில் தனது மகள் பள்ளியில் இன்சுரன்ஸ் பணம் கட்டியிருந்ததாகவும் இறந்ததால் 10 ஆயிரம் பணம் வந்ததாக கூறி ஆசிரியர் ஒருவர் விஜயலட்சுமியிடம் பணம் கொடுக்க 25 ஆண்டுகளுக்கு முன் பஞ்சர் கடையை தொடங்கி தற்போது வரை நம்மிக்கையோடு நடத்தி வருகிறார்.
 
குடும்பமே தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சொன்ன கணவனுக்கு அன்று தைரியம் கொடுத்து தன்னம்பிக்கையோடு தொழிலை நடத்தி வரும் விஜயலட்சுமி, தற்போது படித்த இளைஞர்கள் தற்கொலை செய்வதை கடுமையாக சாடுகிறார்.


 

 
எட்டாவது படித்த நானே தன்னம்பிக்கையோடு வாழும் போது படித்த இளைஞர்கள் வாழ்க்கையில் தன்னம்மிக்கையோடு வாழ வேண்டும் என்கிறார். தன்னுடையை மகன்கள் அருகில் வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தாலும் விஜயலட்சுமியை பொறுத்த வரை கடையில் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு, ஆடு மாடுகளை பார்த்து கொண்டு இருந்து விடுகின்றேன். தேசிய நெடுஞ்சாலை என்பதால் 24 மணி நேரமும் வாகனங்கள் வந்து செல்வதால் எந்நேரமும் பஞ்சர் ஒட்டி கொடுப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
 
கரூர் பகுதி சமூக ஆர்வலர்களின் கருத்து என்னவென்றால் எது எதற்கோ விருது வழங்கி கெளரவிக்கும் மாவட்டம் நிர்வாகம், மாநில அரசு, மத்திய அரசு விஜய லட்சுமியை கெளரவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். மென்மையானவர்கள் பெண்கள் என்பதை தகர்த்தெறிந்து  கடினமான பணிகளை கூட எளிதாக கையாள முடியும் என நிருபித்து கொண்டிருக்கிறார் கரூர் விஜயலட்சுமி.