வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2016 (10:43 IST)

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலை செய்துகொண்ட கரத்தே மாஸ்டர்

கராத்தே மாஸ்டர் ஒருவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீட்டைப் பூட்டிவிட்டு, ஹோட்டல் ஒன்றில் அவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
வில்லிவாக்கம், பொன் விழா நகர், மாரியம்மன் கோயில் தெருவை  சேர்ந்த மனோகரன் என்கிற கராத்தே மனோகரன், சோழவரம் சன் சிட்டி நகரிலுள்ள பாலாஜி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்துள்ளார். மனோகரன் கராத்தே மாஸ்டர் என்று கூறப்படுகிறது.
 
இவர், சில தினங்களுக்கு முன்பு வில்லிவாக்கத்தை சேர்ந்த சரண்யா (21) என்ற பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து, தனது மனைவி என அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனோகரன் வெளியே சென்றுள்ளார். மனோகரன் வீட்டைவிட்டு வெளியே சென்ற தகவலை வீட்டு உரிமையாளரிடம் தெரிவிக்கவில்லை.
 
எந்த தகவலும் மனோகரிடம் இருந்து வராததை அடுத்து வீட்டின் உரிமையாளரான பாலாஜி சில தினங்களுக்கு பின்னர் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூட்டிக் கிடந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி, மனோகரனின் உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அப்போது, வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் மனோகரன் அறை எடுத்து தங்கி இருந்தபோது தற்கொலை செய்து  கொண்ட தகவல் தெரியவந்தது. 
 
பின்னர், சோழவரம் காவல் நிலையத்தில் பாலாஜி புகார் கொடுத்தார். உடனே அங்குவந்த காவல் துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே சென்றனர். அப்போது அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. சடலத்தை மீட்ட காவல் துறையினர் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
விசாரணையில், மனோகரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருப்பது தெரிந்தது. மேலும், சரண்யாவை, வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்தபோது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது.