வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2019 (15:37 IST)

எளிய முறையில் அத்திவரதரை தரிசிக்க புதிய வழி – அரசு அறிவிப்பு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனத்துக்கு நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதால் பலரால் தரிசனம் பெற முடிவதில்லை. அந்த குறையை போக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளனர்.

ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை நடைபெறும் அத்திவரதர் தரிசனத்தை காண இந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் லட்ச கணக்கில் வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் அத்திவரதர் தரிசனத்துக்கான கால அளவும் நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனால் பலர் கால்கடுக்க நின்றும் தரிசனம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைனில் சிறப்பு முன்பதிவு மூலம் 300 ரூபாய் செலுத்தினால் 500 நபர்கள் ஒரு நாளைக்கு மட்டும் தனி வரிசையில் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் பலர் அந்த சிறப்பு முன்பதிவை அதிகரிக்க சொல்லி கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று 500 ஆக இருந்த அனுமதி எண்ணிக்கையை 2000ஆக மாற்றியுள்ளது இந்து சமய அறநிலையத்துறை.

இதன்மூலம் ஒரு நாளைக்கு 2000 பக்தர்கள் காலை 6 மணியிலிருந்து 8 மணி வரையிலும், பிறகு மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரையிலும் சிறப்பு வரிசையில் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு இந்துசமய அறநிலையத்துறையின் ஆன்லைன் தளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இரண்டு நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.