1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 12 ஏப்ரல் 2018 (11:03 IST)

இது ஆபத்தானது, அவமானகரமானது: பிரதமருக்கு கமல் அனுப்பிய வீடியோ

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் அவர் டுவிட்டரிலும், பொது மேடைகளிலும் தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்து தைரியமாக பேசி வருகிறார். அவரது பேச்சுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் தமிழக அரசை மட்டுமின்றி தைரியமாக மத்திய அரசையும் விமர்சிக்கும் ஒருசில தலைவர்களில் ஒருவராக கமல்ஹாசன் உள்ளார். இந்த நிலையில் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டி பிரதமருக்கு வீடியோ வடிவில் கமல் கோரிக்கை வைத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
 
ஐயா வணக்கம், என் பெயர் கமல்ஹாசன், நான் உங்கள் குடிமகன். இது மாண்புமிகு பிரதமருக்கு நான் அனுப்பித்த ஒரு திறந்த வீடியோ. தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாதது அல்ல. தமிழக மக்கள் நீதிக்காக போராடி கொண்டிருக்கின்றார்கள். நீதி வழங்கப்பட்டாகிவிட்டது. ஆனால் செயல்படுத்தப்பட வேண்டியது உங்கள் கடமை. 
 
பாமரர்களும் பண்டிதர்களும் இந்த காலதாமதம் கர்நாடக தேர்தலுக்காகத்தான் என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். அது ஆபத்தானது, அவமானகரமானதும் கூட. இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். தமிழர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க நீங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆகவேண்டும். அது உங்கள் கடமை , நினைவுபடுத்த வேண்டியது என் உரிமை. 
 
இங்கே இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை கடித வடிவில் உங்களுக்கு அனுப்புகின்றேன். தயவுசெய்து செயல்படுங்கள். இந்நிலை மாற வழிசெய்யுங்கள். வாழ்க இந்தியா
 
இவ்வாறு கமல்ஹாசன் தனது கருத்தை விடியோ மூலம் குறிப்பிட்டுள்ளார்.