வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2017 (10:49 IST)

சரணடைய சசிகலாவிற்கு அவகாசம் தர முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா நீதிமன்றத்தில் சரண் அடைய அவகாசம் தர முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது...


 

 
எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், அவர்களுக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். மேலும், நேற்று மாலைக்குள் அவர்கள் கர்நடக உயர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆக வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 
 
அந்நிலையில், சசிகலா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அவசரமாக சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த மனுவில் “ தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். நான் தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இருப்பதால் சில கட்சிப் பணிகளை முடிக்க வேண்டியிருக்கிறது. மேலும், எனக்கு உடல் நிலை சரியில்லை என்பதால், சில மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, நீதிமன்றத்தில் சரண் அடைய 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது..
 
ஆனால், அதன் பின் அதுபற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை. மேலும், இதுகுறித்து சசிகலா தரப்பு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என செய்தி வெளியானது. எனவே, எப்போது சசிகலா உள்ளிட்ட மூவரும் எப்போது பெங்களூருக்கு சென்று, நீதிமன்றத்தில் சரண் அடைவார்கள் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
 
இந்நிலையில், நீதிமன்றத்தில் சரண் அடைய சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் கால அவகாசம் வேண்டும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் இன்று  உச்ச நீதிமன்றத்தில் வாய் மொழியாக வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவருக்கும் உடல்நிலை சரியில்லை எனக் காரணம் கூறப்பட்டது..
 
எந்த அவகாசமும் தர முடியாது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உடனடியாக சரண் அடைய வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.