வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 30 மே 2017 (17:54 IST)

அம்மாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அம்மாவின் அரசு!

அம்மாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அம்மாவின் அரசு!

ஜெயலலிதா இறந்த பின்னரும் மாண்புமிகு அம்மாவின் அரசு தான் இது என மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதே அரசு தான் தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள ஜெயலலிதாவின் 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்றும் என கூறியது. ஆனால் தற்போது அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை அரசுடமையாக்கவோ அல்லது ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் அவருக்கான தண்டனையில் இருந்து மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.
 
இந்த வழக்கில் அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் 128 சொத்துக்களில் 68 சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
 
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் சொந்தமான 68 சொத்துகளை கைப்பற்றுமாறு தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு இந்த உத்தரவை சத்தமில்லாமல் ரக்சியமாக பிறப்பித்துள்ளது.
 
சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தொடங்குமாறு 6 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் கடிதம் எழுதியுள்ளது. அதன் நகலை மாநில கண்காணிப்பு ஆணையருக்கும் அனுப்பியிருக்கிறது. பறிமுதல் செய்யப்பட உள்ள ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரின் 68 சொத்துகளின் இன்றைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
மாண்புமிகு அம்மாவின் ஆட்சியே தொடர்ந்து நடந்து வருகிறது, அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என ரெக்கார்ட் செய்து வைத்தவாறு கூறும் அமைச்சர்கள், இந்த அம்மாவின் அரசே அம்மாவின் சொத்துக்களை பறிமுதல் செய்கிறது என பேச முடியுமா என பலரும் பேசி வருகின்றனர்.