1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஏப்ரல் 2019 (09:53 IST)

திமுகவுக்கு ஓட்டுக் கேட்கும் ஜெயலலிதா ? – போஸ்டரால் சர்ச்சை !

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் நிற்கும் பா சரவணனை ஆதரித்து ஜெயலலிதா ஆசி வழங்குவது போல வெளியான போஸ்டரால் சர்ச்சைகள் எழ ஆரம்பித்துள்ளன.

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளுக்கான அதிமுக, திமுக, நாம் தமிழர் மற்றும் அமமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டுவிட்டனர். இந்நிலையில் இப்போது வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திமுகவுக்கு வேட்பாளர்களுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் மே 1 ஆம் தேதியில் இருந்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் பா சரவணனுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆசி வழங்குவது போல போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் திமுக தலைவர்கள் படம் சிறியதாகவும் ஜெயலலிதாவின் படம் பெரியதாகவும் இடம்பெற்றுள்ளது. மேலும் ‘என் ஆசியும் ! என் அன்பும் ! உங்களோடுதான்.துரோகிகளை தோல் உரியுங்கள்’ என ஜெயலலிதா கூறுவது போல வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த போஸ்டரால் திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.