வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (10:23 IST)

ஜாக்டோ நிர்வாகிகள் கைது…பின்பு ஜாமீன் – என்ன ஆகும் போராட்டம் ?

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் நீக்குதல், 7ஆவது ஊதியக் குழுவின் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் ஆகியக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கடந்த 7 நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த போரட்டத்திற்கு மற்ற அரசு ஊழியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆகியோரிடமிருந்து ஆதரவுப் பெருகி வருவதை அறிந்த அரசு போராட்டக் குழுவினரின் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு 17 பி மெமோ  அனுப்புதல் மற்றும் அவர்களைக் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் மூலம் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என எண்ணியது. ஆனாலும் நேற்று முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் போரட்டங்கள் நடந்தன. ஆனால் நேற்று போராடியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று முன் தினம் கைதான ஜாக்டோ ஜியோ முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று அந்தந்த மாவட்ட மாஜிஸ்திரேட்கள் ஜாமீன் வழங்கி விடுதலை செய்துள்ளனர். நிர்வாகிகள் வெளிவந்துள்ளதால் அவர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.