வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (11:13 IST)

இன்று கனமழை; நாளை முதல் குறையும் - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று கனழைக்கு வாய்ப்பிருக்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஆனால், நேற்று முன் தினம் பெரிதாக மழை இல்லை. சென்னையின் பல இடங்களில் வெயில் அடித்தது.
 
அந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் “வங்கக்கடலில் ஏற்கனவே இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிலந்து விட்டது. ஆனால், இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். குறிப்பாக தென் தமிழகம், டெல்டா, காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு மழை பெய்யும். அதேபோல், வரும் சில நாட்களில் மழை படிப்படியாக குறையும்” எனக் கூறினார்.
 
மழை குறையும் எனக் கூறப்பட்டதால், சென்னையில் பல பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. ஆனால், இன்று காலை சென்னையில் தாம்பரம், குரோம்பேட்டை, எண்ணூர், பாடி, வில்லிவாக்கம், திருவான்மியூ, பெரும்பாக்கம், தியாகராயநகர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. இதனால், மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை முதல் படிப்படியாக மழை குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.