1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 29 ஜூன் 2018 (12:16 IST)

உளவுத்துறை ஐ.ஜி அளித்த வாக்குமூலம் - விசாரணை ஆணையம் அதிர்ச்சி

மறைந்த முன்னாள் முதல்வர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது பற்றி தனக்கு தெரியாது என உளவுத்துறை ஐ.ஜி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 
ஜெ.வின் மரணம் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.  இதுரை 40க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்துள்ளது.
 
இந்நிலையில், மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது பாதுகாப்பு வழங்கிய உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி நேற்று விசாரணையில் ஆஜர் ஆனார். அப்போது, 75 நாட்களாக மருத்துவமனையில் ஜெ.வை யார் யாரெல்லாம் சந்தித்தார்கள் என்கிற குறிப்பு பராமரிக்கப்படவில்லை, அதேபோல் ஜெ. சிகிச்சை பெற்ற போது சிசிடிவி அகற்றப்பட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என அவர் வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
அதேபோல் ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த சிறப்பு பிரிவில் பணியில் இருந்த செவிலியர்களை கண்காணிக்கும் பணியை செய்து வந்த செவிலியர் பிரேமா நேற்று அளித்த வாக்குமூலத்தில், ஜெயலலிதா என்ன நோய்க்காக அனுமதிக்கப்பட்டர் என எனக்கு தெரியாது எனக் கூறினார். இதுகேட்டு ஆறுமுகசாமி அதிர்ச்சியடைந்தார். உங்களுக்கு எப்படி அது தெரியாமல் இருக்கும் என அவர் கேள்வி எழுப்பிய போது, அதுபற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என அவர் பதிலளித்தார்.
 
என்ன நோய் என எனக்கு தெரியாது என செவிலியர்களை கவனித்து வந்த தலைமை செவிலியரும், சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது பற்றி எனக்கு தெரியாது என உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தியும் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அவர்களின் வாக்குமூலம் சந்தேகத்தை எழுப்பியிருப்பதால், மீண்டும் அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.