வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (02:07 IST)

“நான் 1000 பன்னீர் செல்வத்தை பார்த்து வந்திருக்கேன்” - சசிகலா சவால்

33 வருடமாக நிறைய போராட்டங்களை சந்தித்து தான் வந்திருக்கிறோம். எனக்கு போராட்டம் அப்படிங்கிறது ஒரு தூசு மாதிரி. இந்த மாதிரி 1000 பன்னீர் செல்வத்தை பார்த்து தான் வந்திருக்கேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார்.


 

அதிமுக நிர்வாகிகள் சந்தித்த பின் போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ”நான் ஜெயலலிதா இறந்த போது, முதல்வர் ஆகியிருப்பேன். எனக்கு துளியும் விருப்பம் இல்லை. அதிமுக ஆட்சி இருக்க வேண்டும். அதற்காக தான் ஓ.பி.எஸ். பதவியேற்க வைத்தேன்.

சில தினங்களாக சட்டசபையில் நடந்த நிகழ்வை பார்க்கும் போது, அமைச்சர்கள் சரியில்லை என்று தெரிவித்தனர். அதன்பிறகு தான் கட்சியை காப்பாற்ற முதல்வராக வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். இதை கட்சி தொண்டர்களுக்கு தெரிய வேண்டும் என்று தான் உங்களிடம் விவரமாக சொல்கிறேன்.

இந்த அரசாங்கம் இருக்க வேண்டும் அதற்காக உயிரையும் விட தயார். 33 வருடமாக நிறைய போராட்டங்களை சந்தித்து தான் வந்திருக்கிறோம். எனக்கு போராட்டம் அப்படிங்கிறது ஒரு தூசு மாதிரி. இந்த மாதிரி 1000 பன்னீர் செல்வத்தை பார்த்து தான் வந்திருக்கேன்.

அதனால், இதை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் பய உணர்ச்சியை பார்த்தால் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. 33 வருடமாக இரண்டு பெண்கள் சேர்ந்து கட்சியை நடத்தியுள்ளோம். சீப்பை மறைத்தால் கல்யாணம் நின்று விடாது. என்னை பொறுத்தவரையில் அதிமுக ஆட்சி அமைப்போம். சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறப்போம்.

129 எம்எல்ஏக்களோடு உறுதி மொழி எடுத்து விட்டு தான் நேற்று முன்தினம் வீட்டிற்கே வந்தேன். உறுதியாக அதிமுக ஆட்சியை பார்ப்போம். எத்தனை ஆண்கள் எதிர்க்கட்சி வந்தாலும், ஒரு பெண்ணா நான் சாதித்து காட்டுவேன். தொண்டர்கள் என்னுடன் இருக்கும் போது, இந்த கட்சியை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது” என்று கூறியுள்ளார்.