1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (09:38 IST)

நடிகர் விக்ரம் மகளின் வைர மோதிரம் சிக்கியது எப்படி?

நடிகர் விக்ரம் மகளின் வைர மோதிரம் சிக்கியது எப்படி?

கடந்த மாதம் நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனுரஞ்சித் ஆகியோரின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.



 


அப்போது அக்ஷிதாவுக்கு நிச்சயதார்த்த மோதிரத்தை மனுரஞ்சித் அணிவித்தார். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி மாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் காதர் நவாஸ்கான் தெருவில் உள்ள ஒரு கடைக்கு வந்த அக்ஷிதா, அங்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது அவர் கைவிரலில் அணிந்திருந்த நிச்சயதார்த்த மோதிரம் மாயமாகி உள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆயிரம் விளக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையத்தைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் லட்சுமணன்(37) என்பவர் அக்ஷிதாவின் வைர மோதிரத்தை கண்டுபிடித்து, நடிகர் விக்ரம் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதுகுறித்து லட்சுமணன் கூறியதாவது, “நான் பணியாற்றும் கால் டாக்சி அலுவலகம் ஆயிரம் விளக்கு காதர்நவாஸ் கான் சாலையில் உள்ளது. கடந்த 2-ந்தேதி அலுவலகம் அருகே நடந்து சென்ற போது சாலையில் சிறிய பொருள் ஒன்று மின்னியது. எடுத்து பார்த்த போது ராசிக்கல் மோதிரம் போன்று தெரிந்தது. அதனை எடுத்து காரில் பொருட்கள் வைக்கும் இடத்தில் போட்டுவிட்டேன். பின்னர் 3 நாட்கள் கழித்து அந்த மோதிரத்தை வீட்டில் வைத்துவிட்டேன். இந்தநிலையில் ‘யூடியூப்’ இணையதளத்தை பார்த்த போது, ‘நடிகர் விக்ரம் மகளுடைய வைர மோதிரம், எனது அலுவலகம் அருகே தொலைந்து போன தகவலை அறிந்தேன்.

செய்தித்தாள்களில் வந்த செய்தியையும் பார்த்தேன். என்னிடம் கிடைத்த மோதிரம், அந்த மோதிரமாக இருக்குமோ? என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து நான் உறுப்பினராக இருக்கும் காந்தி உலக மையத்தின் தலைவர் எம்.எல்.ராஜேசிடம் தெரிவித்தேன். என்னிடம் கிடைத்த மோதிரம், நடிகர் விக்ரம் மகள் மோதிரமா? என்பதை உறுதி செய்வதற்காக எம்.எல்.ராஜேஷ் மோதிரத்தை படம் எடுத்து ‘வாட்ஸ்-அப்’மூலம் நடிகர் விக்ரம் குடும்பத்தினருக்கு அனுப்பினார்.

படத்தை பார்த்தவுடன், அது  அக்‌ஷிதாவின் வைர மோதிரம் தான் என அவர்கள் உறுதி செய்தனர். பின்னர் ஈ.சி.ஆரில் உள்ள முகவரியில் நகையை ஒப்படைத்துவிடுங்கள் என்றனர். அதன்படி நானும், எம்.எல்.ராஜேசும் வைர மோதிரத்தை நடிகர் விக்ரம் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம். என்னுடைய நேர்மையை பாராட்டி அவர்கள் வெகுமதி வழங்கினர்.நடிகர் விக்ரம் வீட்டில் இல்லை. அவர் செல்போனில் பேசி எனக்கு பாராட்டும், நன்றியும் கூறினார். விரைவில் நாம் சந்திப்போம் என்றும் கூறினார்.”என்றார்.