செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 ஜூன் 2018 (19:22 IST)

பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஓட்டல் அதிபருக்கு வெட்டு

பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஆத்திரமடைந்த ரவுடிகள் ஓட்டல் உரிமையாளரின் நான்கு விரல்களையும், காலையும் வெட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
திருநெல்வேலியை அடுத்துள்ள முக்கூடல் செல்லும் சாலையில்  ஒரு ஓட்டலில் நேற்று ஏழுபேர் சேர்ந்த ரவுடி கும்பல் சாப்பிடுவதற்கு பிரியாணியை பார்ச்சல் வாங்கிச்சென்றனர். இதையடுத்து, அந்த கும்பல் தாமிரபரணியில் குளித்துவிட்டு  பிரியாணி சாப்பிட்டபோது அதில் சிக்கன் லெக் பீஸ் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்த கிளம்பி அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளனர்.
 
அங்கு ஓட்டல் உரிமையாளர் ஜாகீர் உசேன் மாற்றும் அவரது மனைவி பானு இருந்துள்ளனர். கத்தியுடன் நுழைந்த அந்த ரவுடி கும்பல் பானுவின் தலையிலும் கையிலும் அரிவாளால் வெட்டினர். இதில் அவரது இடதுகை விரல் துண்டிக்கப்பட்டது. கடைக்குள் இருந்த ஜாகீர் உசேன் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவரது வலதுவகையின் நான்கு விரல்களை துண்டித்தனர். லெக் பீஸ் வைக்கமாட்டாயா என கேட்டு அவரது காலிலும் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.
 
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜாகீர்உசேன் மற்றும் அவரது மனைவி பானு ஆபத்தான நிலையில் அங்குள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு காரணமான ரவுடி கும்பல் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. ஆனாலும், இவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி வியாபாரிகள்  நுாற்றுக்கணக்கான கடைகளை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.