1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 17 ஏப்ரல் 2017 (15:24 IST)

இரட்டை இலை இடைத்தரகர் - யார் இந்த சுகாஷ் சந்தர்?

தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை தினகரன் தரப்பிற்கு பெற்று தர லஞ்சம் பெற்று இடைத்தரகராக செயல்பட்டதாக சுகேஷ் சந்தர் என்பவரை டெல்லி போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.


 

 
இது தொடர்பாக தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாளை அவர்கள் சென்னை வந்து தினகரனிடம் விசாரணை நடத்த உள்ளனர். ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கு தொடரப்பட்டுள்ளதால் தினகரன் இதில் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் யார் இந்த இடைத்தரகர் சுகாஷ் சுந்தர் என நீங்கள் தெரிந்த கொள்ள விரும்பினால் 4 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2013ம் ஆண்டு இவர் தன்னுடைய காதலியும், நடிகையுமான லீனா மரியாபாலுடன் டெல்லியில் கைதானவர் என்பதும், பல மோசடிகளில் ஈடுபட்டவர் என அப்போது செய்திகள் வெளிவந்ததும் உங்கள் நினைவுக்கு வரும். இவருக்கு பாலாஜி, சேகர் ரெட்டி, சுகாஷ், சந்திரசேகர், சதீஷ் சந்திரா என பல பெயர்கள் உண்டு.
 
கேரள நடிகையான லீனா பால் மரிய பால் என்பவர், வங்கி ஒன்றில் ரூ.19 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில்,  அவரது காதலன் சுகேஷ் சந்தருடன் கொல்கத்தாவில் தலைமறைவாக இருந்த போது, 2013ம் ஆண்டு மே மாதம் போலீசார் கைது செய்தனர். அப்போதுதான் இந்த சுகேஷ் சந்தர் செய்திகளில் அடிபட்டார்.


 

 
கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் லீனா மரிய பால் (25). பிரபல மலையாள நடிகை ஆவார். பிடிஎஸ் பட்டதாரி ஆன இவரது தந்தையோ இன்ஜினியர். இவர் நடிகர் மோகன்லால் நடித்த ரெட் சில்லி, மெட்ராஸ் கபே, தவுசன்ட்ஸ் இன் கோவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரும் இவரது நண்பரான பெங்களூரை சேர்ந்த பாலாஜியும்(சுகேஷ் சந்தர்) சேர்ந்து சென்னை கனரா வங்கியில் 19 கோடி கடன் வாங்கியிருந்தனர். ஐஏஎஸ் அதிகாரி பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்து இந்த கடனை சுகேஷ் சந்தர், லீனா மரிய பாலும் பெற்று மிக பெரிய மோசடி செய்துள்ளனர்.
 
இவர்கள் மீது கிரிமினல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவானார்கள். இந்த நிலையில், டெல்லியில் 2013ம் ஆண்டு மே 27ஆம் தேதி லீனா மரியாபாலை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், சுகேஷ் சந்தர் காரில் தப்பி விட்டார். அங்கிருந்து 9 சொகுசு கார்கள் மற்றும் 4 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லீனா மரியாபால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


 

 
அதன் பின் தலைமறைவாக இருந்த சுகேஷ் சந்தரை, டெல்லி போலீசார் வலை வீசி தேடி வந்தனர். அந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் கங்கர்பிதா எல்லையில் அவர் 
 
அடுத்த பக்கம் பார்க்க...

பதுங்கி இருப்பதை டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, டெல்லி போலீசார் விரைந்து சென்று கொல்கத்தாவில் ஒரு வணிக வளாகத்தில் வைத்து அவரை கைது செய்தனர். அப்போது, சைரன் வைத்த காரில் டெல்லியில் வலம் வந்ததும், அவரை உயர் அதிகாரி என நினைத்து பல போலீசார் அதிகாரிகள் அவருக்கு சல்யூட் வைப்பார்கள் என்பதையும் சுகேஷ் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும், ஹெலிகாப்டர் ஒன்று வாங்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறி அவர் போலீசாரை அதிர வைத்தார்.


 

 
அவரிடமிருந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள 2 வைர மோதிரங்கள், ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஒரு வைர கம்மல், ரூ.3 லட்சம் மதிப்புள்ள பேக், 5 செல்போன்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் நேபாளம், பூடான் நாடுகளின் கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. டெல்லி போலீசார் சேகர் ரெட்டியை கைது செய்து டெல்லிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையின்போது, மோசடி பணத்தில் சுகேஷ் சந்தர் சொகுசு வாழ்க்கை நடத்தி இருப்பது தெரிய வந்தது. ரூ.19 கோடி மோசடி பணத்தில், ரூ.7 கோடிக்கு சொகுசு கார்களும், ரூ.1 கோடிக்கு நகைகளும் வாங்கியதாக அவர் தெரிவித்தார்.
 
அதன்பின் அவர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதுதான் அவரை பற்றி வெளியான கடைசி செய்தி.
 
மேலும், சினிமா இயக்குனர் என்று பொய் சொல்லி, சுகேஷ் சந்தர் தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாகவும், அதை கலைத்து விட்டதாகவும், சொகுசு வாழ்க்கை வாழலாம் என ஆசை கூறி தன்னை மயக்கி குற்றச் செயல்களில் ஈடுபட வைத்ததாகவும்,  லீனா பால் அப்போது, போலீசாரிடம் கண்ணீர் வாக்குமூலம் கொடுத்தார். 


 

 
இந்நிலையில்தான் இவர் இரட்டை இலை சின்னத்தில் இடைத் தரகராக செயல்பட்டதாக போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.  சிறையில் அடைக்கப்பட்ட சுகேஷ் சந்தர், விடுதலை ஆகி டெல்லியில் முகாமிட்டு இடைத் தரகராக மாறி மீண்டும் குற்றச்சாட்டுகளில் தற்போது சிக்கியுள்ளார்.
 
அதேபோல், அவரின் காதலி லீனா மரியா சிறையிலிருந்து விடுதலையாகி, சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த பிரியாணி படத்தில் ஒரு காட்சியில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.