வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (12:09 IST)

சிலை கடத்தல் விவகாரம் - சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை

பொன்.மாணிக்கவேல் விசாரணை மீது நம்பிக்கை இல்லாததால் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதும், அவர் அதிரடியாக செயல்பட்டு பல சிலைதிருட்டு சம்பவங்களை கண்டறிந்தார். அதோடு, தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சில விலை மதிப்புடையை சிலைகளை அவர் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்தார்.
ஆனால், தமிழக அரசுக்கு அவர் சரியான தகவலை அளிக்கவில்லை எனக்கூறி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து தமிழக அரசு அவரை பலமுறை நீக்க முயற்சி செய்தது. ஆனால், நீதிமன்றம் தலையிட்டு அவர் அந்த பணியிலேயே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. 
காவல் துறையினர் விசாரணை நடத்திய வர இந்த வழக்கு சரியாகவே சென்றது. ஆனால், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின் விசாரணையில் வெளிப்படை தன்மையில்லை. எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது நீதிமன்றம். 
 
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு உடனடியாக கொள்கை முடிவு எடுத்து வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க அரசாணை வெளியிட்டது. இதற்கு திமுக உட்பட பல்வேறு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் சிலைகடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை காப்பாற்றவே தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கை சிபிஐ வசம் மாற்ற நினைக்கிறது. ஆகவே வழக்கை சிபிஐ வசம் மாற்ற தடை விதிக்க வேண்டும் என யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர். தமிழக அரசு ஒரே நாளில் அரசாணை வெளியிட காரணம் என்ன? என கேள்வி எழுப்பினர். இந்த அரசாணை ஒரு நிமிடம் கூட அமலில் இருக்கக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கும் டிஜிபிக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.