வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 6 பிப்ரவரி 2019 (13:02 IST)

ஒரு தலைமுறையையே சீரழிச்சது பத்தாதா? -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் குட்டு!

டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டுமெனத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டுக் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. அரசுக்கு வருமானம் அளிக்கக்கூடிய துறைகளில் இப்போது டாஸ்மாக் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சாதாரண நாட்களில் சராசரியாக 70 கோடி அளவுக்கு தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் நடக்கிறது. பண்டிகை நாட்களில் இது இன்னும் பல மடங்கு அதிகரிக்கிறது.

இதனால் அரசு, மக்கள் எவ்வளவுக் கோரிக்கை வைத்தாலும் டாஸ்மாக் கடைகளை மூட மறுத்து வருகிறது. தேர்தல் நேரங்களில் மட்டும் மதுவிலக்கை ஒருப் பிரச்சார உத்தியாகப் பயன்படுத்திவிட்டு மறந்து விடுகிறது. ஆனால் டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி தமிழகம் முழுவது மக்கள் ஆங்காங்கேப் போராடி வருகின்றன. அது போல டாஸ்மாக் இயங்கும் நேரத்தைக் குறைக்க சொல்லியும் குரல்கள் எழுந்துள்ளன.

அந்த வகையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்குக் கோபமாக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது. அதில் ‘தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஏன் மாற்றியமைக்கக் கூடாது. டாஸ்மாக் கடைகளைத் திறந்து ஒரு தலைமுறையினரையே குடிகாரர்களாக மாற்றி அவர்களின் வாழ்க்கையை சீரழித்தது போதாதா ?’ எனக் கேள்விக் கேட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து உடனடியாக தமிழக அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.