வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2016 (15:23 IST)

அவசரமாக வேட்புமனு தாக்கல் தேதி அறிவித்தது ஏன்? - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே, வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்தது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
 

 
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பாக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு ஒன்றினைத் தொடர்ந்திருந்தார்.
 
அதில், ‘நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டங்களில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு, பழங்குடியினருக்கான தொகுதிகள் ஒதுக்கீடு ஆகியவை முறையாக பின்பற்றப்படவில்லை என்பதால், அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் இரா.கிரிராஜன் ஆகியோர் ஆஜரானார்கள்.
 
அப்போது தேர்தல் தேதியை ஞாயிற்றுக்கிழமை அறிவித்து விட்டு, மறு நாளே வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் என அறிவித்ததால் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை ஆய்வு செய்யக்கூட கால அவகாசம் இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது என்று தெரிவித்தனர்.
 
இதையடுத்து, உள்ளாட்சி மன்றத் தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே வேட்பு மனுத்தாக்கலை அறிவித்தது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
 
இதையடுத்து பல மாவட்டங்களில் பழங்குடியினத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்றும் வில்சன் வாதிட்டார்.
 
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் அளித்த பதிலில், விதிமுறைகளின்படியே மாநிலத் தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்திருப்பதாக கூறினார்.
 
இதனையடுத்து பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், தமிழக அரசு நாளைக்குள் (29.9.2016) பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.