1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (13:55 IST)

மோடி விளக்கு ஏற்ற சொன்னது எதற்காக? எச்.ராஜா அடடே விளக்கம்!!

மோடி விளக்கு ஏற்ற சொன்னது எதற்காக என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. பத்து நாட்கள் முடிவடைவதை தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில் அவர் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனித்தனியாக இருந்தாலும் 130 கோடி மக்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஏப்ரல் 5 ஆம் தேதி மிகவும் முக்கியமான நாள் என்றும் அன்று இரவு 9 மணிக்கு மக்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 
இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் இதை நீட்டிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்மூலமாக நமது ஆரோக்கியத்திற்காக உழைக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட சக மக்களை அந்த 9 நிமிடத்தில் நினைத்து பார்க்க வேண்டுமென அவர் கூறியுள்ளார். ஆனால், இது கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது. 
 
இந்நிலையில், கிண்டல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மோடி விளக்கு ஏற்ற சொன்னது எதற்காக என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... 
 
ஆர் எஸ் எஸ் ஸ்தாபகர் ஹெட்கேவாரிடம் சங்கத்தை அரசு தடை செய்தால் என்ன செய்வீர்கள் என்ற போது அவர் சொன்னார், ஒன்றும் செய்ய மாட்டோம் ஷாகா நேரத்தில் அது நடைபெறும் இடத்தில் ஒருமணி நேரம் படுத்திருப்போம் என்றார். உடல் மட்டுமே படுத்திருக்கும், உள்ளம் சங்கப் பணி பற்றியே எண்ணிக்கொண்டிருக்கும் என.
 
அதேபோல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட உறுதியோடு ஒரு செயலைச் செய்யும் போது ஒற்றுமை, உற்சாகம் ஏற்படும். விளக்கேற்றுவதன் குறிக்கோள் அதுவே என பதிவிட்டுள்ளார்.