வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (11:25 IST)

திடீரென முதல்வரைச் சந்தித்த விஜயபாஸ்கர் – குட்கா விசாரணை எதிரொலி ?

குட்கா ஊழல் வழக்கில் கடந்த 2 நாட்களாக விசாரிக்கப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திடீரென தமிழக முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமியை சந்தித்துள்ளார்.

தமிழகத்தில் தடை செய்ய்ப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை டிஜிபி ராஜேந்திரன் போன்றோர் மீது குற்றச்சாட்டு எழுப்பியது.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இதுதொடர்பாக சட்டமன்றத்திலும் கேள்வி எழுப்பினர். வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. சிபிஐ, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் உள்ளிட்ட பல அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இவ்வழக்கில் குட்கா நிறுவன உரிமையாளர் மாதர ராவ், கலால் வரி அதிகாரி பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சிவக்குமார் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. விஜயபாஸ்கரும் ரகசியமாக சென்று 2 நாட்களாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். விசாரணையில் என்ன நடந்தது என்பன போன்ற தகவல்கள் இன்னும் வெளியாக்வில்லை.

இந்நிலையில் இன்று திடீரென விஜயபாஸ்கர் முதல்வரை சென்று சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சந்திப்பு விசாரணை நடந்ததன் பின்னால் நடந்துள்ளதால் குடகா வழக்கின் எதிரொலியாக இதை அரசியல் வட்டாரத்தில் கருத ஆரம்பித்துள்ளனர்.குட்கா வழக்கில் இருந்து வெளிவர முதலவரின் உதவியை விஜயபாஸ்கர் கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.