1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 2 ஜனவரி 2019 (07:31 IST)

6 மாத கருக்கலைப்பிற்கு நான் காரணமில்லை – கௌசல்யா விளக்கம்

கௌசல்யா சக்தி திருமணத்தால் கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக கௌசல்யா கருத்து தெரிவித்துள்ளார்.

ஆணவக்கொலையால் தனது கணவர் உடுமலைப் பேட்டை சங்கர் உயிரை இழந்த கௌசல்யா சங்கர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார். சங்கர் இறந்து இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் கௌசல்யா நிமிர் கலையகத்தின் தலைமை ஆசான் சக்தி என்ற நபரை மறுமனம் செய்ய முடிவெடுத்தார். பெரியார் சிலை முன் திராவிட இயக்க தோழர்கள் முன்னிலையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

ஆனால் திருமணம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே கௌசல்யாவை திருமனம் செய்திருக்கும் சக்தி, சிலப் பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும். ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டு அவர் கர்ப்பமானதும் அந்த கருவை வற்புறுத்தி கலைக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த விவரங்கள் யாவும் கௌசல்யாவுக்கும் தெரியும் என்றும் தெரிந்தும் சக்தியை திருமணம் செய்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் முற்போக்கு திருமணமாகக் கொண்டாடப்பட்ட கௌசல்யா – சக்தி கல்யாணம் சர்ச்சைகளுக்கு உள்ளானது.

இதையடுத்து இந்த சர்ச்சைகள் குறித்து தீர்வு காண தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் -விடுதலைக் கழகத் தலைவர், கொளத்துர் தா.செ. மணி ஆகிய இருவரிடமும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இருவரும் அனைத்துத் தரப்பினரையும் விசாரித்த பின் அளித்த அறிக்கையில் சக்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதகவும் அதற்கு அவருக்குத் தண்டனையாக 3 லட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்படுவதாகவும், 6 மாத காலத்திற்கு பறையிசைக்கக் கூடாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து பெண்ணை காதலித்து ஏமாற்றியவருக்குத் தண்டனை 3 லட்சம் அபராதம் மட்டும்தானா என்றும் கட்டப்பஞ்சாயத்து இயக்கம் எனவும் பல்வேறு விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.

இதையடுத்து இவ்விவகாரம் குறித்து முதல் முறையாக கௌசல்யா மௌனம் கலைத்து தன் மீதான விளக்கத்தை அளித்துள்ளார்.

தனது  முகநூலில் அவர் பகிர்ந்துள்ள கருத்து :-
’அனைவருக்கும் வணக்கம்!
தோழர் தியாகு, தோழர் கொளத்தூர் மணி ஆகியோரின் அறிக்கையில் என் மீது சொல்லப்பட்ட பிழையை மட்டுமே நான் ஏற்கிறேன். மற்ற அவதூறுகளை மறுக்கிறேன். 6 மாத கருக்கலைப்பு என்பதும் அதற்கு நான்தான் காரணம் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். அதில் உண்மையும் இல்லை. இது தலைவர்களுக்கு நன்கு தெரியும். என்னுடைய பிழை என்பது சக்திக்கு முன்பு சில காதல்கள் இருந்திருக்கிறது சில போக்குகள் இருந்திருக்கிறது தெரிந்தே நான் விரும்பியதும் திருமணம் செய்து கொண்டதும் மட்டும்தான். இந்த அடிப்படையில் நான் செய்த பிழை என்று அறிக்கையில் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்கிறேன். நானும் சக்தியும் கருக்கலைப்புக்கு பொறுப்பு அல்ல என்பதை மீண்டும் அழுத்தமாகக் குறிப்பிட  விரும்புகிறேன். இவ்விளக்கம் இல்லாமல் அறிக்கையை பகிர்ந்தால் பல அவதூறுகளை ஏற்றுக்கொள்வது போல் ஆகிவிடும் என்பதாலேயே இந்த விளக்கம்.’