1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 11 பிப்ரவரி 2017 (23:39 IST)

ஆட்சியமைக்க காலம் தாழ்த்துகிறார்: ஆளுநர் மீது குற்றம் சுமத்தும் சசிகலா

ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையாகவே கருதுகிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கூறியுள்ளார்.


 

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆட்சியை நடத்தப்போவது ஓ. பன்னீர்செல்வமா? அல்லது சசிகலாவா? என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

இந்நிலையில், ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக, அதிமுக எம்.எல்.ஏ.க்க.ளில் ஒரு பிரிவினர் கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கம் அருகேயுள்ள கூவத்தூரின் கோல்டன் பே ரெஸார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா 3 மணி நேர ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் சசிகலா போயஸ் கார்டன் திரும்பினார்.

அங்கே அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’எம்.எல்.ஏக்கள் உடனான சந்திப்பு மனநிறைவை தந்தது. குடும்ப உறுப்பினர்களை சந்தித்தது போன்ற மன திருப்தி.  அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் மன உறுதியுடன் உள்ளனர்.  

ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையாகவே கருதுகிறேன்.  இன்றுவரை பொறுத்திருந்தோம். நாளை வேறுவிதமாக போராடுவோம்’’ என்று தெரிவித்தார்.