1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (06:55 IST)

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்

தேர்தல் கமிஷனர் என்றாலே ஆட்சியில் இருப்பவருக்கு சாதகமாக செயல்படும் பதவி என அரசியல்வாதிகள் பலர் நினைத்து வந்த நிலையில் தேர்தல் கமிஷனுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்பதையும் தேர்தல் கமிஷனர் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்பதையும் நிரூபணம் செய்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் அவர்கள் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87
 
இந்திய தேர்தலில் புரட்சியை செய்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் அவர்களின் மறைவிற்கு அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
கடந்த 1990ஆம் ஆண்டு டிசம்பர் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற டி.என்.சேஷன்  அந்த பதவியில் ஆறு ஆண்டுகள் இருந்தார். டி.என்.சேஷன் தலைமை தேர்தல் கமிஷனராக இருந்தபோது தான் வாக்காளர் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல்வாதிகள் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என்ற வழக்கமும் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இரண்டு லட்சம் அரசு அரசு பணியாளர்களை வாக்குச்சாவடிகளில் பணியில் அமர்த்தியது, தேர்தல் நாளில் நடைபெறும் குற்றங்களை முற்றிலும் தவிர்த்தது இவரது சாதனைகள் சில. மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செய்யும் தேர்தல் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தவர் இவர்தான் என்பதும், அரசியல் கட்சிகள் வாக்காளர்களை தேர்தல் வாக்கு சாவடிக்கு அழைத்து வருவதை தடுக்கும் விதத்தில் நடவடிக்கை எடுத்தவரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு என்ற அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி, நேர்மையான அதிகாரி என்று இந்தியா முழுவதும் பாராட்டப்பட்டவர். தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்  1997ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், கே.ஆர்.நாராயணனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதேபோல் 1999ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டும் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது