வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 6 மே 2015 (17:03 IST)

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியில் விவசாயி தற்கொலை

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம், முதலில் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றார். தற்போது தமிழக முதலமைச்சராக உள்ளார்.
  
இந்த தொகுதிக்கு உட்பட்ட,  உப்புக்கோட்டையைச் சேர்ந்த ராசு என்பவர் மகன் அழகுவேல்.
 
இவருக்கு சொந்தமான தோட்டத்தை வேறு ஒரு நபருக்கு குத்தகைக்கு கொடுத்தார். ஆனால், அவர் பணம் தராத நிலையில், தனது தோட்டத்தில் உள்ள வாழைத் தார்களை வெட்டி விற்பனை செய்தார்.
 
இந்நிலையில், கடந்த மாதம் இந்த பகுதியில் கடும் சூறாவளிக் காற்று வீசியது. இதன் காரணமாக, வாழைகள் நாசம் அடைந்து  அவருக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.
 
இதனால், அவர், வெளியில் வாங்கிய கடன் ரூ. 3 லட்சத்தை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
 
இதன்காரணமாக, மனமுடைந்த அழகுவேல், தனது தோட்டத்திற்கு சென்று, அரளி விதையை அரைத்துக் குடித்து, மயங்கிவிழுந்தார்.
 
அந்த பக்கம் சென்றவர்கள் அழகுவேல் மயங்கிகிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரை காபாற்றி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அழகுவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்தியாவின் பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியிலேயே விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.