1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (13:52 IST)

விவசாயியிடம் அரசியில் ஆசை காட்டி 6 லட்சம் லபக்கிய ஜோசியர்கள்

ஸ்ரீவைகுண்டம் , சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தன்னுடைய கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த முறை சுப்பிரமணியபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.  ஆனால் அரசியல் ஆசை அவரை விடவில்லை தொடர்ந்து இருந்து வந்தது. இவரை பற்றி தெரிந்த நண்பர்கள்  அவரிடம் பணம் பறிக்க  திட்டமிட்டனர்.
                                           































ஒருநாள், சுப்பிரமணியத்திடம் இவரது நண்பர்களான நெல்லையை சேர்ந்த மகேந்திரன், பாபநாசத்தை சேர்ந்த சதாசிவம், கந்தகுமார் ஆகியோர் தங்களுக்கு தெரிந்த ஜோசியர்களிடம் பரிகாரம் செய்தால் தமிழ அரசியலில் பெரிய பதவியை அடையலாம் என்றும்  எதிர்காலத்தில் தமிழ முதல்வராக கூட வாய்ப்புகள் உள்ளது என்று கூறியுள்ளார்.
 
இந்நிலயைில், அவர்கள் சமாதானபுரத்தை சேர்ந்த ஜோசியர்கள் மரியதங்கம், மணிமாறன் ஆகியோரிடம் சுப்பிரமணியத்தை அழைத்து சென்றனர். ஜோசியர்கள் இருவரும் சுப்பிரமணியத்தின் ஜாதகம் பார்த்தனர். அப்போது, சுப்பிரமணியத்தின் வீட்டின் தரைக்குள் முதுமக்கள் தாழி உள்ளதாகவும், அதில் உள்ள பிணம்தான் சுப்பிரமணியத்தின் அரசியல் வெற்றியை தடுப்பதாகவும் கூறினர். அந்த தாழியை எடுத்து விட்டால் சுப்பிரமணித்திற்கு முதல் மந்திரி பதவி கிடைக்கும் என்று ஜோசியர்கள் தெரிவித்தனர்.

அப்போது ஜோசியர்கள் சொன்னதை நம்பிய சுப்பிரமணியன் ஜோசியர்களுக்கு 6 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அதன் பின்னர் சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்த ஜோசியர்கள் அவரது வீட்டின் தரையை தோண்டினர். ஆனால் அங்கு முதுமக்கள் தாழி எதுவும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் அவர்களை வெளுத்து வாங்கியுள்ளார்.பின்னர், ஸ்ரீ வைகுண்டம் காவல் நிலையத்தில் இதுகுறித்து  அவர் புகார் செய்தார்.

புகாரின் பேரில் சுப்பிரமணியத்தின் நண்பர்கள் மகேந்திரன், சதாசிவம், கந்தகுமார், ஜோசியர்கள் மரியதங்கம், மணிமாறன் ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.