1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (14:11 IST)

வருமான வரித்துறை அதிகாரியிடம் கள்ள நோட்டுகள் - சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரியிடம் கள்ள நோட்டுகளை போலீசார் கைப்பற்றிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை பாலவாக்கத்தில் வசிப்பவர் நாகசுப்பிரமணியன். இவர் வருமான வரித்துறையில் பணியாற்றி கடந்த 2009ம் ஆண்டு ஓய்வு பெற்றவர். இவர்  அந்த பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் கொடுத்த 100 ரூபாய் நோட்டின் மீது ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இதுபற்றி போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார்.
 
அதையடுத்து, அவரின் வீட்டில் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவரிடம் 2,00,248 ரூபாய் இருந்தது. அதில் 10 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது.  எனவே, வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவை அனைத்தும் 100 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. பால் வாங்குவது, மளிகை வாங்குவது என குறைந்த செலவிற்கு மட்டுமே அவர் கள்ள நோட்டுகளை பயன்படுத்தி வந்துள்ளார்.
 
டெல்லியில் யாரையோ சந்தித்ததாகவும், அவர் அந்த நோட்டுகளை கொடுத்ததாக அவர் கூறியுள்ளர். ஆனால், இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது பற்றி அவர் எந்த தகவலும் கூறவில்லை. எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
 
ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரியிடமிருந்தே கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.