1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (06:55 IST)

ஈரோடு எம்பி கணேசமூர்த்தி காலமானார்.. சீட் கிடைக்காததால் ஏற்பட்ட அதிருப்தி..!

ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மாரடைப்பால் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவருக்கு அவசர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த கணேசமூர்த்தி கடந்த 2019ம் ஆண்டு ஈரோடு மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விரும்பியதாகவும் ஆனால் திமுக கூட்டணியில் இருந்த மதிமுகவுக்கு திருச்சி என்ற ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த ஒரு தொகுதியிலும் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிட அறிவிக்கப்பட்டதால் கணேசமூர்த்தி மனம் உடைந்ததாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து அவர் தற்கொலைக்கு முயன்று விஷம் குடித்ததாகவும் அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானதாகவும் கூறப்பட்டது.

கணேசமூர்த்திக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு நல்ல தொகுதி கொடுக்க திட்டமிட்டு இருந்தேன் என்றும் ஆனால் அவர் அவசரப்பட்டு தவறான முடிவு எடுத்து விட்டார் என்றும் சமீபத்தில் அவரது உடல்நிலை குறித்து கேட்டு அறிந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva