1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 23 டிசம்பர் 2017 (09:16 IST)

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க சசிகலாவுக்கு 15 நாள் ‘கெடு’

விசாரணை ஆணையம் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் சமர்பிக்க  வேண்டுமென சசிகலாவுக்கு ‘கெடு’ விதித்து சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 சிகிச்சைப் பெற்று, கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியதால், அவரது மருத்துவமனையின் சிகிச்சை குறித்து விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சிகளும், அதிமுக தொண்டர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

விசாரணை ஆணையத்தில் தீபா, அவரது கணவர் மாதவன், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவரான தினேஷ் உள்ளிட்ட 17 பேர் இதுவரை நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். விடுமுறை முடிந்து ஜனவரி 2-ந் தேதி முதல் தொடங்கவிருக்கும் விசாரணையில் விளக்கமளிக்க சசிகலா, அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப்ரெட்டி, துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு விசாரணை ஆணையம் ‘சம்மன்’ அனுப்பியுள்ளது.
 
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் உள்ள சசிகலாவுக்கு அனுப்பி உள்ள சம்மனில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அவரிடமுள்ள அனைத்து ஆவணங்களையும் 15 நாட்களுக்குள் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் அப்பல்லோ நிர்வாகத்திற்கு, மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ ஆவணங்களையும், வீடியோ பதிவு மற்றும் கண்காணிப்பு பதிவு ஆகியவற்றை விசாரணை ஆணையத்தில் 10 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் விசாரணை ஆணையம் கெடு விதித்துள்ளது.